மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

Update: 2020-01-07 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனைப்பட்டா, பசுமை விடுகள், திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டு, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இதில் வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் கொடி நாள் நிதி வசூலாக பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை கலெக்டரிடம் அரசு அலுவலர்கள் வழங்கினார்கள்.

இதில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) டி.ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட வழங்கல் அதிகாரி கஸ்தூரி, தனித்துணை கலெக்டர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேலு மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்