கொரோனா வைரஸ் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2020-03-11 22:00 GMT
பழனி,

தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. அதன்படி தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலமான பழனிக்கு வருகிற பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதற்காக பழனி முருகன் கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என கண்டறிய சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழனி கோவில் நிர்வாகம் சார்பில் ரோப்கார், மின் இழுவை ரெயில்நிலையம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் உள்நுழையும் பகுதிகளில் ஒரு டாக்டர், 2 நர்சு ஆகியோர் பணியில் உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளதா? என மருத்துவகுழுவினர் கேட்டறிந்து தீவிர சோதனை செய்கின்றனர். அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இந்த பணிகள் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் நளினி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழனி சப்-கலெக்டர் உமா தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பஸ் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பஸ்கள், தங்கும் விடுதிகளை சுகாதாரமாக வைக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளது.

மேலும் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பழனி பகுதியில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தது.

இதேபோல் சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலுக்கு வருகிற அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு மருந்து தெளிக்கப்படுகிறது.

மேலும் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் கூறும்போது, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வருகிற சுற்றுலா பயணிகளை பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்