கல்பாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

கல்பாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-03-13 22:15 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் பெரிய வெளிக்காடு கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 5 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக உரிய முறையில் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பல முறை இது குறித்து வட்டார வள அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் கடலூர் - மதுராந்தகம் சாலையில் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்பட போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம பம்ப் ஆபரேட்டர் சரியாக பணி செய்வதில்லை எனவும், உடனடியாக அவரை மாற்றி வேறு ஆபரேட்டரை நியமனம் செய்யும் படியும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்