தேனி அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு கிரிக்கெட் விளையாடியபோது பரிதாபம்

தேனி அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2020-06-10 00:59 GMT
அல்லிநகரம்,

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீசன் (வயது 4). இவன் நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியில் உள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றில் ஜெகதீசன் தவறி விழுந்தான்.

அந்த கிணறு தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் மயங்கினான். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சிறுவன் சாவு

பின்னர் அவர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டனர். அவனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஜெகதீசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்