ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்த வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டரிடம் மனு

ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்த வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2020-06-10 01:14 GMT
தேனி,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் வாசுகி தலைமையில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை உயர்த்திதை போல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றி வரும் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 என்பதை 59 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சொக்கத்தேவன்பட்டி அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 1 ஆண்டு ஆகியும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. அவர்களின் குடும்ப சூழல் கருதி மீண்டும் பணி வழங்க வேண்டும். கம்பம் வட்டாரத்தில் மொத்தம் உள்ள 131 அங்கன்வாடி மையங்களில் 263 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில், 142 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 7 ஆண்டுகளாக காலிப்பணியிடங்களை நிரப்பாததால் ஊழியர்களுக்கு பணிச்சுமை உள்ளது. எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்