மீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த கிராம மக்கள்: நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு

மீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த நக்கம்பாடி கிராம மக்களை கலைக்க போலீசார் போராடினர்.

Update: 2020-06-14 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பாசன ஏரி உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பெரிய ஏரியில் இருந்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சம்பா சாகுபடி முடிந்ததும் ஏரியின் தண்ணீர் அளவு குறையும். அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் கடந்த மாதம் மீன்பிடி திருவிழாவை நடத்தவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டதால் மீன்பிடி திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் முடிவுசெய்து அதன்படி மீன்பிடி திருவிழா கடந்த 3-ந் தேதி நடைபெற்றது.

பரபரப்பு

இதில் நக்கம்பாடி, செந்துறை, சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் குவிந்திருந்த பொதுமக்களை கலைந்து போகச்சொல்லி எச்சரிக்கை செய்தனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஒன்று கூடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவே அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மீன் பிடித்து செல்லலாம் என ஆர்வத்துடன் வந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நக்கம்பாடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில் திரளான பொதுமக்கள் இறங்கி மீன்பிடித்தனர். இதனால் மீண்டும் நக்கம்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் திரளான போலீசார் திரண்டு சென்று மீன் பிடித்த பொதுமக்களை களைந்து போக சொல்லி போராடினர்.

மேலும் செய்திகள்