எச்.டி. ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி

ரேவண்ணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதும், பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

Update: 2024-05-07 21:32 GMT

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி.யான அவர், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு பிரஜ்வால் தப்பி சென்று விட்டார்.

இவருக்கு எதிராக, பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டுக்கு பின்னர் பெங்களூரு மற்றும் ஹாசன் நகரில் உள்ள வீடு, வீட்டில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலகம் என பல இடங்களில் வைத்து, பிரஜ்வால் தன்னுடைய மொபைல் போனில் பல வீடியோக்களை பதிவு செய்து, பின்னர் அவற்றை லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.

இதுபோன்று பென் டிரைவில், 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்றும் அவற்றில் பல வீடியோக்கள் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஓட கூடியவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாசனில் உள்ள ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அளித்த புகாரில், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேவகவுடாவின் மூத்த மகனான எச்.டி. ரேவண்ணா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின்போது மந்திரியாக இருந்தவர். 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணா அடிக்கடி தன்னை அவருடைய வீட்டுக்கு கூப்பிட்டார் என அந்த பெண் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த புகாரில், ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போது அந்த பெண்ணை அழைத்து கொண்டு, சேமிப்பு அறைக்கு சென்று விடுவார். இதன்பின்பு பழங்களை தரும் சாக்கில் பல இடங்களில் தொட்டார். சேலை உள்ளிட்ட ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் பேரில், 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்று விட்டோம் என சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கூறினர்.

இந்த சூழலில், பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சிறப்பு விசாரணை குழுவின் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

கைது நடவடிக்கைக்கு பின்னர் ரேவண்ணா கூறும்போது, மே 2-ந்தேதி அளித்த புகாருக்கு சான்று எதுவும் இல்லை. இது ஒரு பெரிய அரசியல் சதி திட்டம். எனக்கு எதிராக சதி திட்டமொன்று தீட்டப்பட்டு உள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், ரேவண்ணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதில், அவருடைய முக்கிய உறுப்புகள் சீராக இருக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், சிறப்பு விசாரணை குழு அதிகாரிகளுடன் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை கடத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த பெண்ணை, ரேவண்ணாவின் மகனான பிரஜ்வால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுபற்றிய வீடியோவும் வைரலாகி உள்ளது. ஆபாச வீடியோ விவகாரம் வெளிவந்ததும், பிரஜ்வாலை மதசார்பற்ற ஜனதாதள கட்சி சஸ்பெண்டு செய்தது.

பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்