உளுந்தூர்பேட்டை அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலியானார்.

Update: 2020-07-16 05:31 GMT
உளுந்தூர்பேட்டை,

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன். இவர் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை முதியவர் ஒருவர் சைக்கிளில் கடக்க முயற்சி செய்தார். அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம், அந்த முதியவர் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் விவரம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான சாமி துரை (வயது 64) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாமிதுரையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்