விரைவில் தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பும் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை மாநகரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்றும் தமிழகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2020-07-21 01:26 GMT
சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை திரு.வி.க மண்டலம் ஸ்ட்ரான்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரானா தடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர், வீதி வீதியாக காய்ச்சல் முகாம் நடத்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுககளுக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டினார். பின்னர் மருத்துவ முகாம்களை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போர்க்கால பன்முக நடவடிக்கைகளால் கொரானா நோய் தொற்று தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரானா பரிசோதனைகள் இயதியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் எடுக்கப்படுகிறது. தினசரி 50 ஆயிரம் பேர் வரை கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தொற்று கண்டுப்பிடிக்கப்படுகிறது.

அதிக காய்ச்சல் முகாம்கள், தொற்று பரிசோதனை, வீடு வீடாக சென்று களப்பணியாளரின் பணி, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குதல், கபசுர குடிநீர், தனிமைப்படுத்துதல், கொரானா தொற்றினை ஆரம்ப நிலையிலே கண்டறியது குணப்படுத்துதல், இணை நோய்களை மருத்துவ முகாம்கள் நடத்தி கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது சென்னை மாநகரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும்.

திரு.வி.க. மண்டலத்தில் 6,775 பேர் பாதிக்கப்பட்டனர் அதில் 5,088 குணமடைந்தனர் 1,604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிதி சுமையின் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மண்டல கண்காணிப்பு அதிகாரி அரவிந்த், முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்