கடலூர் துறைமுகம் அருகே மாவட்ட நிர்வாகத்திடம் 17 சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு

கடலூர் துறைமுகம் அருகே மாவட்ட நிர்வாகத்திடம் 17 சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு.

Update: 2020-07-21 06:38 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கான தடை நீடித்து வரும் நிலையில் மீனவர்களில் ஒரு தரப்பினர் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும், 32 கிராமங்களை சேர்ந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையை பன்படுத்துவதால் சிறுபடகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வரும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவற்றை தடைசெய்ய கோரியும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனங்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கூட்டம் நடத்தினர். இதில் கிராமத்திலுள்ள 17 சுருக்குமடி மீன்பிடி வலைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பது எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள மாற்று ஏற்பாடாக மானிய விலையில் படகு மற்றும் மீன்பிடி வலைகளை வாங்குவது எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து கடலூர் சோனங்குப்பம் கிராமத்தில் உள்ள மீனவர்கள் நேற்று தங்களிடம் உள்ள 17 சுருக்குமடி வலைகளை கொண்டுவந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க இருந்தனர். இது பற்றிய தகவல் சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் தாங்களே வந்து சுருக்குமடி மீன்பிடி வலைகளை எடுத்துச் செல்வதாக கூறியதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்