பெங்களூரு விமான நிலையத்தில் முதியவர் திடீர் சாவு கொரோனாவால் இறந்தாரா? - பயணிகள் பீதி

பெங்களூரு விமான நிலையத்தில் முதியவர் திடீரென இறந்தார். ஆனால் அவர் கொரோனாவால் இறந்ததாக பயணிகளிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-07-23 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு ஒரு உள்நாட்டு விமானம் வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த முதியவர் விமான நிலைய வரவேற்பு பகுதியில் வந்த போது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனை பார்த்து சக பயணிகளும், விமான நிலைய அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், முதியவரை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த முதியவர் கொரோனாவால் தான் இறந்து விட்டதாக அவருடன் விமானத்தில் வந்த சக பயணிகள் பேசிக்கொண்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அந்த முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் கூறும்போது, முதியவர் கொரோனாவால் இறக்கவில்லை. அவர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறினர்.

ஆனாலும் அந்த முதியவருடன் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் கொரோனா பீதி நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்