தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன்- அமித்ஷா
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன் என தூத்துக்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணி பிரசார கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-
பாஜக தலைமையிலான மத்திய அரசு, விமான தாக்குதல் மூலம் தீவிரவாதிகளை அழித்துள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம், அதை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
கடந்த 5 ஆண்டுகால பாஜகவின் சிறப்பான ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும். மத்திய அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு பதவி வழங்கி கவுரவித்தது. அபிநந்தன் பிறந்த தமிழகத்தில் இருந்து பேசுவதில் பெருமை அடைகிறேன்.
தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து உள்ளோம். மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களும் விரும்புகின்றனர்.
பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு சொல்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன். தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை.
கனிமொழி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.