தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்; ராஜ்நாத் சிங்
தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி அரசில் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிக்கும்படி மக்களிடம் கேட்டு கொண்டார்.
இந்தியா முன்பு பலவீன நாடு என கூறப்பட்டு வந்தது. ஆனால் மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தபின் இன்று உலகம் முழுவதும் அது மாற்றப்பட்டு உள்ளது. ஒரு வலிமையான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என கூறினார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தினை ஊக்குவிக்காமல் அதனை நிறுத்த வேண்டும். தீவிரவாத பயிற்சிகளை நிறுத்திட வேண்டும். அந்நாடால் தனியாக இதனை செய்ய முடியவில்லை எனில் இந்தியாவிடம் உதவி கேட்கலாம். அவர்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதம் முடிவுக்கு வரவேண்டும் என அவர் கூறினார்.