பாராளுமன்ற தேர்தல் 2019: உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் 143% வாக்குப்பதிவு

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தாஷிகேங் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே உயரமானது என்று அறியப்பட்ட நிலையில், தேர்தலில் அங்கு விநோதமாக 143 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2019-05-21 05:21 GMT
மக்களவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து உள்ளது. வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் ஒரு வினோதம் நடந்துள்ளது.

இமாசல பிரதேசத்தில் உள்ள தாஷிகேங் என்ற இமயமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையமானது கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இருப்பதால், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி என்ற பெயரை பெற்றிருந்தது.

தாஷிகேங் மற்றும் கெட் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு  வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலின்படி இந்த வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்கள் 49 ஆகும். இங்கு நடந்த தேர்தலில், 36 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

எனினும், இந்த வாக்குச்சாவடியில் 142.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அது எப்படி என்று கேட்கிறீர்களா? தாஷிகேங் வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பக்கத்து வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.

பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். ஆனால், இங்கு தேர்தல் பணியாற்றிய அலுவலர்கள், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் தாங்களும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பியதால், அதற்கேற்ப தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்களிக்க முடியும்.

எனினும், பொதுவாக சொந்த தொகுதிகளில் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்குவதில்லை.

மிகவும் உயரமான பகுதி என்பதாலும், மற்ற பகுதிகளில் இருந்து வரும் அதிகாரிகள் சிரமத்தை சந்திக்கலாம் என்பதால், உள்ளூர் அதிகாரிகளைக் கொண்டே தேர்தல் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 70 வாக்குகள் இங்கு பதிவான நிலையில் 34 அதிகாரிகள் இங்கு வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் இருக்கும் எண்ணிக்கையைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால் வாக்குப்பதிவு சதவிகிதமும் 100-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இமாசல பிரதேசத்தில் உள்ள ஹிக்கீம் என்ற கிராமத்தில் 14 ஆயிரத்து 356 அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதனை விட உயரமான தாஷிகேங் என்ற கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.

தாஷிகேங் கிராமம் இமாசல பிரதேசத்தில் உள்ள லாகுல்- ஸ்பிட்டி என்ற மாவட்டத்தில் காசா என்ற நகரில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்திய-சீனா எல்லையில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்