உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான் பிரதமர் மோடி பிரசாரம்

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தர பிரதேசம் முன்னேறும் -பிரதமர் மோடி

Update: 2017-02-17 00:15 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தர பிரதேசம் முன்னேறும் என்று பிரதமர் மோடி பேசினார்.

2 இடங்களில் பிரசாரம்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, ஹர்டோய், பாரபங்கி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

உத்தரபிரதேச மக்கள், பா.ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து விட்டனர். இங்கு காவி பெருங்கடலே திரண்டு வந்திருப்பதை பார்க்கிறேன்.

இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களிலும் பா.ஜனதாவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் நலனுக்காகவே அரசியல் செய்து வருவதை வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.

வழி காட்டுகிறேன்

உத்தரபிரதேசத்தை முன்னேற்றுவது இவர்களது நோக்கமல்ல. தங்கள் ஓட்டு வங்கியை எப்படி அதிகரிக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். பதவிக்கு வந்த பிறகு, தங்களுக்கு ஓட்டு போட்ட பிரிவினருக்கு மட்டும் நல்லது செய்கிறார்கள். இந்த கட்சிகளிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும்.

பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை அளியுங்கள். 5 ஆண்டுகளில், உத்தரபிரதேசம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடு படுவதற்கான வழிகளை நான் காட்டுகிறேன். கங்கையும், யமுனையும் பாயும் வளமான பூமி இது. இங்கு கோடிக்கணக் கான தொழிலாளர்கள் உள்ளனர். இருந்தாலும், இங்கு வறுமை நிலவுவதற்கு மக்கள் காரணம் அல்ல. இதுவரை இருந்த அரசுகளே காரணம்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், எந்த பாரபட்சமும் இன்றி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பா.ஜனதா மட்டுமே இளைஞர்களுக்காக பாடுபடும் கட்சி. கள்ளச்சந்தையில் யூரியா விற்கப்படுவதை தடுத்துள்ளோம். இதய நோய்க்கான மருத்துவ கருவிகள் மற்றும் 700 மருந்துகளின் விலையை குறைத்துள்ளோம். எல்.இ.டி. பல்ப் விலையை குறைக்க செய்துள்ளோம்.

தத்துப்பிள்ளை

பகவான் கிருஷ்ணர், உத்தரபிரதேசத்தில் பிறந்தார், குஜராத்தை தனது கர்மபூமியாக ஆக்கிக்கொண்டார். நான் குஜராத்தில் பிறந்தேன். உத்தரபிரதேசம் என்னை தத்து எடுத்துள்ளது.

நான் உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை. இதுதான் எனது பெற்றோர். பெற்றோருக்கு துரோகம் செய்யும் மகன் நான் அல்ல. பெற்றோரை கைவிட மாட்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

மேலும் செய்திகள்