காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Update: 2017-02-18 23:00 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக பாரமுல்லா மற்றும் சோபூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்களை பயங்கரவாத இயக்கங்களில் சேர்க்க பலர் முயன்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசமிருந்த சில இளைஞர்களையும் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இர்ஷத் அகமது ஷா என்ற பயங்கரவாதி நேற்று போலீசாரிடம் சிக்கினார். ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இவர் பல்வேறு கொலை உள்ளிட்ட தீவிரவாத செயலில் ஈடுபட்டவர் ஆவார்.

இந்த பயங்கரவாதி மற்றும் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாரமுல்லாவில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்பு அழிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்