2016–17–ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீதம் வட்டி மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்
இ.பி.எப். என்றழைக்கப்படுகிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2016–17 நிதி ஆண்டில் 8.65 சதவீத வட்டி வழங்க மத்திய அறங்காவலர்கள் குழு (சி.பி.டி.) முடிவு எடுத்தது.;
புதுடெல்லி,
இ.பி.எப். என்றழைக்கப்படுகிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2016–17 நிதி ஆண்டில் 8.65 சதவீத வட்டி வழங்க மத்திய அறங்காவலர்கள் குழு (சி.பி.டி.) முடிவு எடுத்தது. இந்த வட்டிவீதம் வழங்கப்பட்டு விடும் என மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறி வந்தார்.
இந்த நிலையில், 2016–17 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டது. இதன்மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் (தொழிலாளர்கள்) பலன் அடைவார்கள்.
அதே நேரத்தில் 8.65 சதவீத வட்டி வழங்குவதால் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இருந்தபோதும் இந்த வட்டிவீதத்தை வழங்கினாலும் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் உபரியாக நிதி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைப் பொறுத்தமட்டில் எவ்வளவு வட்டி வழங்கவேண்டும் என்று அறங்காவலர்கள் குழு முடிவு எடுத்து, அதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டால், அந்த வட்டி உடனடியாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
2015–16 நிதி ஆண்டில் 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.