காட்டில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை அடித்துக்கொன்ற புலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வண்டிக்கடவு பகுதியை சேர்ந்த முதியவர் மாறன் (வயது 60). இவர் தனது சகோதரியுடன் கேரள-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு இன்று காலை விறகு சேகரிக்க சென்றுள்ளார்.
கன்னரும்புலா ஆறு அருகே விறகு சேகரித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த புலி, மாறனை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மாறனின் சகோதரி கிராமத்திற்கு விரைந்து சென்று புலி தாக்கியது குறித்து கூறியுள்ளார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், புலி தாக்கி இழுத்து சென்ற மாறனை தேடினர். இந்நிலையில், சில மணிநேர தேடுதலுக்குப்பின் மதியம் 2 மணியளவில் மாறன் படுகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரை மீட்ட வனத்துறையினர், மாறனை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், புலி தாக்கியதில் படுகாயமடைந்த மாறன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து மாறனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.