குப்வாரா அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்

குப்வாரா அருகே பன்ஞ்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

Update: 2017-04-27 02:58 GMT
குப்வாரா,

பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இந்த  பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும் ஆதரவுக்கரம் அளிப்பதாக கூறப்படுகிறது. 

இதனால், எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள  ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள்  ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கேப்டன் உட்பட ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில்  இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் ஆங்கில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்