பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா?
ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதையொட்டி, 30–ந் தேதி இரவு 11 மணிக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுடெல்லி,
ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதையொட்டி, 30–ந் தேதி இரவு 11 மணிக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜெவாலா கூறும்போது, ‘‘காங்கிரஸ் பங்கேற்குமா என்று பரிசீலித்து வருவதால் அரசுக்கு இன்னும் எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. ஜி.எஸ்.டி. அமல்படுத்தும் முறைகள், இதனால் சாதாரண மக்கள், அமைப்புசாரா நிறுவனங்கள், சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் தொல்லைகள் உள்பட பல்வேறு விஷயங்களை பரிசீலித்து வருகிறோம்’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, ‘‘பா.ஜனதாவும், குறிப்பாக நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோதும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்துள்ளனர். இப்போது உரிய ஏற்பாடுகளை செய்யாமல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதில் ஏன் இந்த அவசரம்?’’ என்று கேள்வி எழுப்பினார்.