அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

தற்போது, ஏப்ரல் மாதம் முதல் அதற்கடுத்த ஆண்டின் மார்ச் மாதம்வரை, நிதி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. 1867–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தை கொண்டு வந்தனர்.

Update: 2017-06-26 23:30 GMT

புதுடெல்லி

தற்போது, ஏப்ரல் மாதம் முதல் அதற்கடுத்த ஆண்டின் மார்ச் மாதம்வரை, நிதி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. 1867–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தை கொண்டு வந்தனர். இதற்கிடையே, காலண்டர் ஆண்டைப் (ஜனவரி–டிசம்பர்) போலவே, நிதி ஆண்டையும் ஜனவரி மாதம் தொடங்குவது போல் மாற்ற பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

அதையடுத்து, இதுபற்றி ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த டிசம்பர் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்ற ‘நிதி ஆயோக்’ அமைப்பும் ஆதரவு தெரிவித்தது. பாராளுமன்ற நிலைக்குழுவும் சிபாரிசு செய்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்றும் யோசனை, மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. இத்தகவலை மத்திய அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அது தொடர்பான நடைமுறைகளை முடிப்பதற்கு 2 மாதங்கள் தேவைப்படும். எனவே, அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நவம்பர் மாதம் முதலாவது வாரத்திலேயே தாக்கல் செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், 150 ஆண்டு கால வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இது, வரலாற்று சிறப்புமிக்க மாற்றமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை பிப்ரவரி 28–ந்தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 1–ந்தேதிக்கு மோடி அரசு மாற்றியது, குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்