மாநிலங்களவை எம்.பி.யாக அமித்ஷா, ஸ்மிரிதி இரானி பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.யாக அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2017-08-25 06:21 GMT

புதுடெல்லி,


குஜராத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, திலீப்பாய் பாண்டியா மற்றும் காங்கிரஸை சேர்ந்த அகமது படேல் ஆகியோரின் பதவிக் காலம் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்த 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் 8-ம் தேதி நடந்தது. இதில் பாரதீய ஜனதா தரப்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவ மற்றும்  பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் களம் இறக்கப்பட்டார். மொத்தம் 4 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டி ஏற்பட்டது. 

குஜராத் சட்டப்பேரவையின் மொத்த பலம் 182 ஆகும். தேர்தலுக்கு முன்னதாக 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் தற்போது 176 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாரதீய ஜனதாவுக்கு 122 எம்எல்ஏக்கள். தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் அமித்ஷா, ஸ்மிருதி இரானி தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் போராடி வெற்றிபெற்றார். 

பாரதீய ஜனதாவின் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி இன்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். துணை ஜனாதிபதி, மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஸ்மிருதி இரானி சமஸ்கிருத மொழியில் பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்