ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஜூலை மாதத்தில் ரூ.95,000 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது-அருண் ஜெட்லி தகவல்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஜூலை மாதத்தில் ரூ.95,000 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) ஜூலை 1–ந்தேதி முதல் அமலானது. இந்த வரிவிதிப்பில் உள்ள மாறுபாடுகளை களைய அவ்வப்போது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. ஆகஸ்டு 5–ந்தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது சில நடுத்தர மற்றும் ஆடம்பர கார்களுக்கான வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐதராபாத்தில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார். கூட்டத்தில் இட்லி மாவு, புளி, கியாஸ் ‘லைட்டர்’ உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கை ஆலோசிக்கப்பட்டது. சில நிறுவனங்கள் வரியை தவிர்க்க ‘பிராண்டு’ குறியீடு இல்லாமல் விற்பனை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மந்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி வருவாய் திருப்திகரமாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஜூலை மாதத்தில் ரூ.95,000 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. சிறிய கார்களுக்கு வரி உயர்வு இல்லை. நடுத்தர கார்களுக்கு 2 சதவீதமும், பெரிய கார்களுக்கு 5 சதவீதமும், எஸ்.யு.வி. உயர்ரக கார்களுக்கு 7 சதவீதம் ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.