கர்நாடக தேர்தல் போர் போன்றது, நாங்கள் பாண்டவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடக தேர்தல் போர் போன்றது, நாங்கள் பாண்டவர்கள் என முதல்-மந்திரி சித்தராமையா கூறிஉள்ளார். #KarnatakaElection2018 #Siddaramaiah
பெங்களூரு,
குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் எட்டி பிடிக்க வேண்டும் என பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியான காங்கிரசும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. பா.ஜனதா இந்துத்துவா கொள்கைக்கு பதிலளிக்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி கோவில்களுக்கு பயணம் மேற்கொண்டது போன்று கர்நாடகத்திலும் அவர் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பணிக்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், “கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் போர் போன்றது. நல்ல பாதையில் பயணம் மேற்கொள்ளும் நாங்கள் (காங்கிரஸ் கட்சியினர்) பாண்டவர்கள், தீய வழியில் செல்லும் அவர்கள் (பாரதீய ஜனதா) கெளரவர்கள்,”என விமர்சனம் செய்தார்.