13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் கைது

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் 13 வயது சிறுமியை 3 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். #MuzaffarnagarRape

Update: 2018-04-22 08:10 GMT
முஷாபர் நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் 13 வயது சிறுமியை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்ட அதிகாரி பெர்தாப் கூறுகையில், ”முஷாபர் நகருக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு சில மருந்துகளை வாங்க சென்றுள்ளார். அங்கு சோனு வர்மா என்னும் மருத்துவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 3 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை காணாத பெற்றோர் மற்றும் கிராமத்தினர் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து தப்பி வந்த சிறுமி தான் வன்கொடுமை செய்யப்பட்டதை தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மருத்துவர் சோனு வர்மாவை கைது செய்து விசாரித்து வருகிறோம். மேலும் அவரது மருத்துவமனையிலிருந்த சில ஆட்சேபிக்கக்கூடிய மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளோம். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்