காஷ்மீரில் லஷ்கர் -இ -தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 2 பேர் பலி
ஜம்முவின் பண்டிபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை தாக்கி கொன்றுள்ளனர். #Millitants
ஸ்ரீநகர்,
வடக்கு காஷ்மீர் பகுதியிலுள்ள பண்டிபோரா மாவட்டத்தில் ஷாஹ்குந்த் ஹாஜின் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ளவர்களை தாக்கி குலாம் ஹாசன் தார் மற்றும் அவருடைய மருமகன் பஷீர் அகமத் தார் ஆகிய இருவரையும் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இருவரும் ஹஜின் பகுதியின் உள்ளூர் மசூதி அருகே உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரையும் தீவிரவாதிகள் கொடூரமான முறையில் தாக்கி கொன்றுள்ளதாகவும், மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
நேற்றும் இதே போன்று சோபோரி பகுதியின் வீட்டின் ஒன்றில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த தம்பதியினரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பழைய பாராமுல்லா பகுதியில் மார்க்கெட் ஒன்றில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.