மும்பையில் கனமழை: ரயில் சேவை பாதிப்பு, விமானங்கள் தாமதம்
மும்பையில் கனமழை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களும் தாமதம் ஆகியுள்ளன. #HeavyRain
மும்பை,
மராட்டிய மாநில தலைநகரான மும்பைக்கு ஆண்டுதோறும் பருவமழையை சமாளிப்பது என்பது சவாலாக இருந்து வருகிறது. நகரை வெள்ளம் சூழாமல் தடுப்பதற்காக மழைக்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை தொடங்க உள்ளது. தற்போது பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது.
இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 நாட்கள் ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மிக கனமழை பெய்யும் பட்சத்தில் மும்பை நகரில் பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. அதன்படி, இன்று மும்பையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோசமான வானிலை கரணமாக மும்பையில், 32 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. புறநகர் ரயில்சேவைகளும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதம் ஆகியுள்ளது.
மீட்பு பணிகளை சுணக்கம் இன்றி செய்யும் வகையில், மாநகராட்சி துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் என மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் அனைவரது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த 2 நாட்களும் அதிகாரிகள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.