மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2வில் 75% பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வாங்க ரூ.25 ஆயிரம் ஊக்க தொகை
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வாங்க ரூ.25 ஆயிரம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த வருடம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 75 சதவீதத்திற்கு கூடுதலாக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு லேப்டாப்புகள் வாங்க ரூ.25 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்க சிங்கின் அரசு முடிவு செய்தது. இதற்காக லால் பரேட் மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி கலந்து கொண்டு 22 ஆயிரத்து 35 மாணவர்களுக்கு இந்த நிதியை வழங்கினார். மீதமுள்ள மாணவர்களுக்கும் நிதி வழங்கப்படும்.
ஊக்க தொகை வழங்கிய பின் மாணவர்கள் முன் பேசிய முதல் மந்திரி, ரூ.25 ஆயிரம் ஊக்க தொகையை கொண்டு மாணவர்கள் தங்கள் விருப்பப்படி லேப்டாப்புகளை வாங்கி கொள்ளலாம். அவர்கள் புதிய அறிவுலகை படைக்கலாம் என கூறினார்.