1000 ஆண்டு பின் தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே

1000 ஆண்டு பின் தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே தனது தவறுக்கு பயணியை இறக்கி விட்டதால் இழப்பீடு தர கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-14 22:30 GMT
சஹரன்பூர்,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.

மன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

விசாரணையின்போது பயணிதான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.

முடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்