ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. #JammuandKashmir #HardlineSecurityPolicy

Update: 2018-06-20 07:13 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாய கட்சி - பாரதீய ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தது. மெகபூபா அரசுக்கு கொடுத்த ஆதரவை பா.ஜனதா திரும்பபெற்றதும் ஆட்சி முடிவுக்கு வந்தது. ‘‘பயங்கரவாதம், வன்முறை, அடிப்படைவாதம் ஆகியவை, காஷ்மீரில் வளர்ந்து வருகின்றன. மக்களின் அடிப்படை உரிமை, குறிப்பாக வாழும் உரிமை, பேசும் உரிமை ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது’’ என்றுகூறி பா.ஜனதா வெளியேறியது. மாறாக ராஜினாமா கடிதம் கொடுத்த மெகபூபா முப்தி, படை பலத்தை பயன்படுத்தும் ராணுவ கொள்கை, காஷ்மீரில் பலன் அளிக்காது, காஷ்மீர் பகைவர்கள் பிரதேசம் கிடையாது என்று குறிப்பிட்டார். 

பயங்கரவாதம் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசின் செயல்பாட்டை பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.  இந்நிலையில் மாநிலத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஜனாதிபதி ஒப்புதலளித்துள்ளார். இதற்கிடையே மாநிலத்தில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

கவர்னர் ஆட்சிக்கு கீழ் வந்துள்ள ஜம்மு காஷ்மீரில், மத்திய அரசு இனி கிளர்ச்சியை எதிர்க்கொள்ளும் ஆப்ரேஷன்களில் கடுமையான பாதுகாப்பு கொள்கையை தொடங்கும், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ நடவடிக்கையை சந்தித்துவரும் சோபியான், குல்காம், ஆனந்த்நாக் மற்றும் புல்வாமாக பகுதிகளில் என்று இத்திட்டம் தொடர்பாக தகவல் தெரிந்த அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். காஷ்மீரில் ரமலான் மாதத்தில் கொண்டுவரப்பட்ட சண்டை நிறுத்தம் முடிவு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில்  அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு தொடர்பான கவலை முக்கிய இடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
 
 “பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷனை தொடங்காமல் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என உணரப்பட்டது. இப்போது ஜம்மு காஷ்மீர் கவர்னர் ஆட்சியின் கீழ் வந்துள்ளது, பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பெயரை வெளியே தெரிவிக்க விரும்பாத மத்திய அமைச்சர் ஒருவர், காஷ்மீர் மாநிலத்திற்குள் மட்டும் கிடையாது எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியிலும் மத்திய அரசு ஆக்ரோஷமான அணுகுமுறையை தேர்வு செய்யும் என கூறிஉள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்