நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி கிடைக்கும் வகையில் சிவசேனா ஆதரவை தெரிவித்துள்ளது. #NoConfidenceMotion

Update: 2018-07-19 09:38 GMT

புதுடெல்லி,

மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை அவையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 533 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 315 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இப்போதைய மெஜாரிட்டி 266 எம்.பி.கள் ஆதரவாகும். 10 எம்.பி. பதவிகள் காலியாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு 172 எம்.பி.க்கள் உள்ளது. அதிமுக, பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என அதிமுக கூறிவிட்டது. இதற்கிடையே பா.ஜனதா அரசை மத்தியிலும், மராட்டியத்திலும் விமர்சனம் செய்யும் சிவசேனா நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.

இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசு ஆதரவு கோரி பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசியதாக தகவல் வெளியாகியது. மக்களவையில் சிவசேனா கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர். அக்கட்சி வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக வாக்களிக்கும், இது அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமித்ஷா பேசியதை அடுத்து, அரசு ஆதரவாக வாக்களிக்கப்படும் என சிவசேனா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொறடா உத்தரவை பிறப்பித்துள்ள சிவசேனா, அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்