12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.
புதுடெல்லி,
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இம்மசோதா, மக்களவையில் கடந்த 30–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. எனவே, இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.
இதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கான குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக, வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதற்காக, இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கான தண்டனை 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. பெண்களை கற்பழித்தால், குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.