உத்தரபிரதேசத்தில் வாரம் 32 பெண்கள் காணாமல் போகிறார்கள் அதிர்ச்சி தகவல்
உத்தர பிரதேசத்தில் வாரம் 32 பெண்கள் காணாமல் போவதாக அம்மாநில குற்ற பதிவு ஆணையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
லக்னோ,
தகவல் உரிமை சட்டத்தின் படி பதில் அளித்துள்ள மாநில குற்ற பதிவு ஆணையம் ஓவ்வொரு வாரமும் 32 பெண்கள் காணாமல் போகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 75 மாவட்டங்களில் இளம்பெண்கள் காணாமல் போனதாக 1,675 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது.
அதே போல் 2018-ல் கடந்த 3 மாதங்களில் மட்டும் 435 பெண்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தை உரிமை ஆர்வலர் உமேஷ் குமார் குப்தா கூறுகையில்,
2018-ல் கடந்த 3 மாதங்களில் மட்டும் 435 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் கடத்தப்பட்டிருக்கலாம்.
காணாமற்போன குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்ததாக இருந்தாலும், முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்கான விகிதம் மிகக் குறைவாக காணப்படுகின்றது. காணாமல் போன குழந்தைகளின் வழக்குகளில் உடனடி எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மற்றொரு குழந்தை உரிமை ஆர்வலர் ஷாசி சிங் கூறுகையில், குழந்தைகள் பணியாற்றுவதற்காக சில மாவட்டங்கள் உள்ளது.
"இத்தகைய சூழ்நிலையில், இத்தகைய பகுதிகளை அடையாளம் காணவும், குழந்தைகள் பெண்கள் இடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் புள்ளிவிவரங்கள் ஒரு முழுமையான பகுப்பாய்வு செய்ய வேண்டும் எனக்கூறினார்.