மாநிலங்களவையில் ஆள்கடத்தல் தடுப்பு மசோதாவை விரைவில் நிறைவேற்ற கோரிக்கை

மாநிலங்களவையில் ஆள்கடத்தல் தடுப்பு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2018-08-09 22:09 GMT

புதுடெல்லி,

நாட்டில் அதிகரித்து வரும் ஆள்கடத்தல் குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட ஆள்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு) மசோதா 2018, கடந்த 26–ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதா கொண்டு வந்திருப்பது ஒரு நேர்மையான முயற்சி என, இந்த குற்றங்களில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசை பாராட்டி உள்ளனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சுமார் 1000 பேர் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறுகையில், ‘இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறுவதுடன், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நடவடிக்கைக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் நாங்கள், தொடர்ந்து இதற்காக போராடி வருகிறோம். ஆனால் இனிமேலும் இதற்காக காத்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருவதாக கூறியுள்ள அவர்கள், வேறு எந்த குடிமகனும் இத்தகைய துன்பத்தை அனுபவிக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்