நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு - சஞ்சய் ராவத்

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

Update: 2024-04-28 12:50 GMT

மும்பை,

மராட்டியத்தில் 5 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி 5 தொகுதிகளில் நடைபெற்றது. 2-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 தொகுதிகளில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

3-வது கட்ட தேர்தல் அடுத்த மாதம் (மே) 7-ந் தேதியன்று ராய்காட், பாராமதி, உஸ்மனாபாத், லாத்தூர்(தனி), சோலாப்பூர்(தனி), மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே ஆகிய 11 தொகுதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. வேட்பாளர்கள் சுற்றி சுழன்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், புனேவில் சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாராமதி மக்களவை தொகுதியின் போட்டி மராட்டியத்தின் பெருமைக்கான போராட்டம். மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30-35 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். சுப்ரியா சுலேவின் பின்னால் மராட்டிய மக்கள் அனைவரும் உள்ளனர், அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வார்கள்.

அஜித் பவார் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு மாறியுள்ளார். வெற்றி பெறுவதில் நம்பிக்கை இருந்தால் அஜித் பவார் ஏன் பாராமதியில் மக்களை அச்சுறுத்துகிறார். நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றத்தை மக்கள் காண்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்