உத்தரபிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை

உத்தரபிரதேசத்தில் 2 சாமியார்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

Update: 2018-08-15 22:00 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (வயது 65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் பிதுனா நகரில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட சில கடைகளை அந்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது. இதனால், அவர்களை விரட்டியடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

கொல்லப்பட்ட சாமியார்கள் இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்