ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் லாலு பிரசாத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
ராஞ்சி,
கால்நடைத் தீவன வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு ராஞ்சியில் உள்ள சிறை யில் அடைக்கப்பட்டார். மகனின் திருமணம், மருத்துவ சிகிச்சைக் காக அவருக்கு 3 மாதங்கள் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்தார். இதனை நிராகரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மும்பையில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் சில நாட்களுக்கு முன்பு பீகார் தலைநகர் பாட்னா திரும்பினார்.
நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக அவர் நேற்று பாட்னாவில் இருந்து விமானம் மூலம் ராஞ்சி சென்றார். இந்தநிலையில் அவர் இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.