பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-10 05:38 GMT
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் ராஜ்காட்டில்  உள்ள காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்செய் சிங் உள்பட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மேலும் செய்திகள்