ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்

தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2006–ம் ஆண்டு, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நிதி மந்திரி பதவி வகித்தார்.

Update: 2018-09-20 22:45 GMT

புதுடெல்லி,

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகே‌ஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது. இது விதிமுறையை மீறிய ஒப்புதல் ஆகும்.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12–ந்தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை, மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து 3 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்