சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-27 09:21 GMT

லக்னோ,

பீகார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு பஸ் ஒன்றில் 95 குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அதில் அவர்கள் கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியாக செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அயோத்தி செல்லும் வழியில் சோதனை நடத்திய குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பஸ்சில் வந்த 95 குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

"பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பஸ்சை சோதனை செய்து 95 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து எந்தவொரு ஒப்புதல் கடிதமும் இல்லை. பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ள போலீசார், அவர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்