காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ஆய்வு மாணவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2018-10-11 22:30 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா நகரில் உள்ள சாட்குந்த் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்புபடையினர் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே சுமார் 4 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் மனன் பஷிர் வானி (வயது 27) என்பவர் ஆய்வு மாணவர் என்பதும், அவர் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்