ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்; நிதீஷ் குமார் நடவடிக்கை
ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோரை நிதீஷ் குமார் இன்று நியமித்துள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக முதல் மந்திரி நிதீஷ் குமார் இருந்து வருகிறார். இக்கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் இன்று நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் கட்சியின் 2வது மிக சக்தி வாய்ந்த நபராக செயல்படுவார்.
கிஷோர் பல கட்சிகளில் தேர்தல் செயல்திட்ட நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இவர் இணைந்துள்ளார். அவரது இந்த நியமனம், கட்சிக்கு உள்ள நிலையான ஆதரவினை கடந்து, சமூக பிரிவுகளை கட்சியானது சென்று அடைவதற்கு உதவும் என அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி கே.சி. தியாகி கூறியுள்ளார்.