‘மீ டூ’ விவகாரம்: முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு

மீ டூ விவகாரம் தொடர்பாக, முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-09 20:15 GMT
புதுடெல்லி,

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பிரபலங்கள், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹேஷ்டேக் மூலம், தங்களது பாதிப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், அதில் தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் அனிசியா பத்ரா, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் மயாங்க் சிங்வி கைது செய்யப்பட்டார். மயாங்க் சிங்வி மீதுதான் நிஹரிகா சிங் குற்றம் சாட்டி உள்ளார்.

அதில், “கடந்த 2011-ம் ஆண்டு, சிங்வியை ஒரு பிறந்தநாள் விருந்தில் சந்தித்தேன். பிறகு அவர், எனது பெயரை தனது மார்பில் பச்சை குத்திக்கொண்டார். என்னிடம் காதலை தெரிவித்தார். எனக்கு மோதிரம் பரிசளித்து, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவரது மோசமான குணம் தெரிந்தவுடன், நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தேன். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், என்னை ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் திட்டினார். தாக்கவும் செய்தார். என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பினார்” என்று நிஹரிகா கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்