உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உயிரிழந்தார்.

Update: 2018-11-12 00:44 GMT
புதுடெல்லி,

கடந்த 2 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் , உரம் மற்றும் நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59. 

புற்று நோய் பாதிப்பால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்னர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக காலை 8 மணி வரை லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்