மத்திய மந்திரி தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது
மத்திய மந்திரி தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நல குறைவால் மறைந்த நிலையில், அவர் வகித்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வேதி மற்றும் உர துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு சதானந்த கவுடாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தோமர் கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சுரங்க துறை மந்திரியாக பதவி வகிக்கிறார். சதானந்த கவுடா புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை மந்திரியாக உள்ளார்.