தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றார்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்று கொண்டார்.

Update: 2018-12-02 06:02 GMT
புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ஓ.பி. ராவத் நேற்று பணி ஓய்வு பெற்றார்.  இதனை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

அதன்படி சுனில் அரோரா இன்று பதவியேற்று கொண்டார்.  அவர் வருகிற 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை நடத்துவார்.  இதனுடன் அடுத்த வருடம் நடைபெறும் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களையும் அவர் நடத்துவார்.

கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், தேர்தல் ஆணையத்தின் மிக மூத்த அதிகாரியாவார்.  அமைச்சகங்களிலும் மற்றும் நிதி, ஆடை மற்றும் திட்ட ஆணையம் போன்ற துறைகளிலும் இவர் பணியாற்றி உள்ளார்.

62 வயது நிறைந்த அரோரா, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் மற்றும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

மேலும் செய்திகள்