ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் கோரும் மனுக்களின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.

Update: 2018-12-05 23:00 GMT
புதுடெல்லி,

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகியவை மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று தொடங்கியது. தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதங்களை தொடங்கினார்.

அவர் தன்னுடைய வாதத்தில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக பதவி ஏற்றது தொடங்கி இன்றைய நிலைமை வரை விரிவாக எடுத்து கூறினார்.

மேலும், சபாநாயகர் இந்த விவகாரத்தில் நடுநிலையாக செயல்படாமல் ஒரு கட்சியின் தலைவர் போல செயல்படுகிறார். அரசுக்கு எதிரான பிரச்சினை எதுவாக இருந்தாலும் இவர் கண்டுகொள்வது இல்லை. அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. ஆனால் அரசுக்கு எதிராக ஏதேனும் பிரச்சினைகள் எழுப்பினால் அவர் அமைதி காக்கிறார். ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருக்கிறார் என்று வாதிட்டார்.

இது தொடர்பான வாதம் இன்றும் (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற உள்ளது.


மேலும் செய்திகள்