தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கெஜ்ரிவால் வழக்கில் மே 3-ம் தேதி பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-30 12:43 GMT

புதுடெல்லி,

அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றபோது, ஜாமீன் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர். 

இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இடைக்கால ஜாமீன் மறுப்பு அல்லது பதில் அளிக்காதது ஆகியவை கைது செய்ய அடிப்படையாக இருக்க முடியாது. சிபிஐ அழைத்ததும் சென்றார். அமலாக்கத் துறை நோட்டீஸ்களுக்கு விரிவாகப் பதிலளித்தார். கைது செய்யப்பட்டதே  சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பதில் அளித்தார். தொடர்ந்து, நீதிபதிகள்  வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன் என அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பினர். "ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி எனத் தெரிவிக்க வேண்டும். சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதை நாம் மறுக்க முடியாது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும்." என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்