சபரிமலை மேற்பார்வை குழுவுக்கு எதிர்ப்பு: கேரள அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சபரிமலை மேற்பார்வை குழுவுக்கு எதிரான கேரள அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Update: 2018-12-07 22:30 GMT
புதுடெல்லி,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களை தடுக்க சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளும், 144 தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கு மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகளை மேற்பார்வை செய்வதற்காக 3 நபர் குழு ஒன்றை மாநில ஐகோர்ட்டு அமைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேரள அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை வழக்கமான அடிப்படையிலேயே விசாரிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே சபரிமலை விவகாரம் கேரள சட்டசபையில் நேற்றும் புயலை கிளப்பியது. அங்கு போலீஸ் கெடுபிடிகளை திரும்ப பெற வலியுறுத்திய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், இது தொடர்பாக தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஆனால் இந்த விவகாரம் ஏற்கனவே சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, முதல்-மந்திரியும் பதில் அளித்து இருப்பதால், மேற்கொண்டு விவாதிக்க முடியாது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறினார். இதனால் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதைத்தொடர்ந்து சட்டசபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே சட்டசபை நடந்தது.


மேலும் செய்திகள்