ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா என செய்தி நிறுவனம் தகவல்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

Update: 2018-12-10 12:10 GMT
புதுடெல்லி 

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும்   கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில்  கடந்த 2016 ஆம் ஆண்டு  ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையை சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் என்று தகவல் வெளியான நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில் கடந்த நவம்பர்  19-ம் தேதி வாரியக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கவர்னர் உர்ஜித் படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை.

இந்த நிலையில்  தற்போது  ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக  ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனம்  தகவல் வெளியிட்டு உள்ளது. உர்ஜித் படேல் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ்  வங்கியின் 24-வது கவர்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்